12.08.2024 - திங்கட் கிழமை
"ஆகையால், இனி ஒருவர் மற்றவரிடம் குற்றம் காணாதிருப்போம். மேலும் சகோதரர் சகோதரிகளுக்குத் தடைக்கல்லாகவோ இடையூறாகவோ இருப்பதில்லை எனத் தீர்மானித்துக் கொள்ளுங்கள்" - உரோமையர் 14:13
நாம் இவ்வுலகில் இருந்து விடைபெறும் வரை யாருடைய வாழ்க்கைக்கும் தடையாய் இருக்கக் கூடாது. உழைப்பதை உண்டு வாழவும், முடிந்தால் இருப்பதை பகிர்ந்து வாழவும் வேண்டும்.
பிறரின் முன்னேற்றத்திற்கு நாம் முட்டுக்கட்டை போடும் போது, நம்மை அறியாமலே நாம் நமக்கு குழி தோண்டிக் கொண்டிருக்கிறோம் என்பது தான் உண்மை.
சில நபர்கள் தங்களுக்கு என்று எதையும் செய்ய வேண்டிய கடமை இல்லை என்றாலும் கூட அது நல்லது என்றால் துணிந்து முன்வந்து செய்கிறார்கள். ஆனால் சில மனிதர்கள் செய்ய வேண்டிய கட்டாயம், உரிமை இருந்தும் கூட அதை செய்ய தவறி விடுகிறார்கள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 17:22-27) இயேசு தான் வரி செலுத்த வேண்டிய இடத்தில் இல்லாவிட்டாலும் கூட மற்றவர்களுக்கு தடையாய் அமைந்து விடக்கூடாது என்பதற்காக பேதுருவை அனுப்பி வரி செலுத்த சொல்கிறார். நீ போய் கடலில் தூண்டில் போடு; முதலில் அகப்படும் மீனை எடுத்து அதன் வாயைத் திறந்து பார்த்தால் ஸ்தாத்தேர் நாணயத்தைக் காண்பாய். அதை எடுத்து உன் சார்பாகவும் என் சார்பாகவும் அவர்களிடம் செலுத்து என்கிறார் இயேசு.
(விவிலிய அடிக்குறிப்பு - ஸ்தாத்தேர் என்பது வெள்ளி நாணயத்தை குறிக்கிறது. 4 திராக்மா பணத்தின் மதிப்பினுடையது. 1 திராக்மா என்பது 1 நாள் கூலி)
கோவில் வரியாக இரண்டு திராக்மா செலுத்த வரிதண்டுவோர் பேதுருவிடம் கேட்க, இயேசு அதை உணர்ந்துக் கொண்டு வரி செலுத்த சொல்கிறார்.
தீயவர்/தீமை தவிர வேறு யாருக்கும் எதிலும் தடையாய் இராதவர் இயேசு.
நம் வாழ்வில் நாம் பணி செய்யும் இடத்தில், பங்கு பெறும் பணித் தளங்களில் நடைபெறும் நல்ல காரியங்களை/கருத்துக்களை வரவேற்க வேண்டும்.
நம்மால் செய்ய முடியாத ஒன்றை, மற்றவர்கள் செய்யும் போது தடையாய் இருப்பதை விட துணை நிற்பது மிக நல்லது.
கிறிஸ்தவர்கள் என்று சொல்வதில் மட்டும் பெருமை காணாது, கிறிஸ்துவை பின்பற்றுவதிலும் பெருமை கொள்வோம்.
தங்குத் தடையேதுமின்றி நன்மை செய்வோம்... இயேசுவின் சார்பாய் செயல்படுவோம் ...
No comments:
Post a Comment