பொதுக்காலம் 19ஆம் வாரம்
11.08.2024 - ஞாயிற்றுக் கிழமை
உணவு வாழ்வும் கொடுக்கிறது, உறவையும் வளர்க்கிறது. உயிர்கள் வாழ உணவு அவசியமாக இருக்கிறது. இந்த உலகில் ஒருவேளை உணவு கூட இல்லாமல் உறங்கச் செல்லக்கூடிய மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த உலகிலும் உணவு பற்றாக் குறை இருக்கிறது.
பகிர்வு வந்தால் உணவு பற்றாக் குறை நீங்கும்...
பாலை நிலத்தில் மன்னா கொடுக்கப்பட்டது பசியாற்ற. இயேசு தன்னையே உணவாக தந்தது பாவம் போக்கி இறை உறவை வளர்க்க.
மன்னாவை உண்ட மக்கள் தங்களின் முணுமுணுப்பை நிறுத்தினர்.
இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்ததாக நற்செய்தி நூல்களில் நாம் வாசிக்கிறோம். தன்னை தேடி வந்த மக்களின் ஆன்ம பசியை போக்கியவர், வயிற்று பசியையும் போக்கினார்.
மனிதன் உண்பதற்காக தான் வாழ்கிறான். அந்த உணவுக்காக தான் இங்கு போராட்டமே நடைபெறுகிறது.
தனி ஒருவருக்கு உணவில்லையேல் இந்த உலகினை அழித்திடுவோம் என்றார் பாரதி. ஆனால் இங்கோ ஒரு வயிறை அடித்து மற்றொருவரின் வயிறு நிரப்பப்படுகிறது.
தொடக்க நூல் 6:21இன் படி உணவு வாழ்வாதாரம், (கடவுள் நோவாவிடம்) "உண்பதற்கான எல்லா வகை உணவுப் பொருள்களையும் நீ எடுத்துச் சென்று சேர்த்து வைத்துக்கொள். அவை உனக்கும் அவற்றிற்கும் உணவாகட்டும்.”
தொடக்க நூல் 18:5இன் படி உணவு புத்துணர்வு கொடுக்கும்/விருந்தோம்பலின் அடையாளம், (ஆபிரகாம் 3 மனிதரிடம்/கடவுளிடம்) "கொஞ்சம் உணவு கொண்டுவருகிறேன். நீங்கள் புத்துணர்வு பெற்றபின், பயணத்தைத் தொடருங்கள். ஏனெனில் உங்கள் அடியானிடமே வந்திருக்கிறீர்கள்” என்றார். “நீ சொன்னபடியே செய்” என்று அவர்கள் பதில் அளித்தார்கள்".
தொடக்க நூல் 27:4இன் படி உணவு ஆசிரை பெற உதவுகிறது, (ஈசாக்கு ஏசாவிடம் )"நான் விரும்பும் முறையில் சுவையான உணவு வகைகளை சமைத்து என்னிடம் கொண்டு வா. நான் அவற்றை உண்பேன். நான் சாகும் முன், உனக்கு மனமார ஆசி வழங்குவேன்" என்றார்.
எண்ணிக்கை 21:5இன் படி உணவு இல்லையென்றால் முணுமுணுப்பு, "மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசினர்; “இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது” என்றனர்.
இவ்வாறு உணவின் மகத்துவம் நீண்டுக் கொண்டே போகிறது. எனவே தான் இயேசு தன்னையே உணவாக தருகிறார். மற்ற உணவு எல்லாம் அழிந்து போகக் கூடியது, அப்போதைக்கு பசியை போக்க கூடியது.
ஆனால் இயேசுவின் திருவுடலும் திருஇரத்தமும் என்றும் அழியா நிலைவாழ்வை தரக்கூடியது. அவரது உடலை உண்போர்க்கு என்றுமே பசி இராது, அவரது இரத்தத்தை குடிப்பதற்கு என்றுமே தாகம் இராது.
இந்த உணவு ஆன்ம பசியை போக்க கூடியது. என்றும் கடவுளை குறித்த, கடவுளின் திட்டத்தை குறித்த ஏக்கத்தோடு நம்மை நிலைத்திருக்க வைப்பது.
அன்று பாலை நிலத்தில் உணவுக்காக இஸ்ரயேல் மக்கள் முணுமுணுத்தனர். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இவர் தன்னை விண்ணகத்திலிருந்து வந்தவர் என்று எப்படி சொல்ல முடியும் என்று யூதர்கள் இயேசுவுக்கு எதிராக முணுமுணுத்தனர்.
இன்றைய முதல் வாசகத்தில் (1அரசர்கள் 19:4-8) எலியாவுக்கு உணவு கொடுக்கப்படுகிறது. கடவுளின் தூதர் எலியாவுக்கு உணவு கொடுத்ததன் வழியாக அவர் வலிமை பெற்றார் அந்த வலிமையின் காரணமாக, 40 பகலும் 40 இரவும் நடந்து சென்று ஒரேபு ஒரு மலையை அடைந்தார்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (எபேசியர் 4:30-5:2) தூய ஆவியாருக்கு துயரம் வருவிக்காதீர்கள் என்று திருத்தூதர் பவுல் சொல்கிறார். அன்பு, நன்மை, பரிவு, மன்னிப்பு ஆகியவற்றால் நம்மை நாம் அணி செய்து கொள்ள வேண்டும். இவைதான் நம் ஆன்மாவை சுத்திகரிக்கும் செயல்கள்.
இதயத்தில் இறைவன் உறவு கொள்ள வேண்டும் என்றால் தூய ஆவியாரின் கனிகளால் நாம் நிரப்பப்பட வேண்டும்.
தன்னையே தருகின்ற இறைவனுக்கு நம்மையே நாம் கொடுக்க முன் வருவோம்.
உணவில்லாமல் உறவு இல்லாமல் தவிக்கின்ற உள்ளங்களுக்கு உணவையும் அன்பையும் கொடுத்து விண்ணகத்தில் நமக்கென இருப்பிடத்தை உருவாக்கிக் கொள்வோம்.
தனது வீட்டு வாசலில் கிடந்த ஏழை இலாசருக்கு உணவளிக்காத செல்வந்தர் நரகத்திற்கு தள்ளப்பட்டார்.
என் களஞ்சியத்தை இடித்து பெரிதாக கட்டுவேன் என்ற செல்வந்தர் அறிவிலியாக பார்க்கப்பட்டார்.
நமக்கு செல்வம் தேவைதான் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அந்த செல்வம் விண்ணகத்தில் சேர்க்கப்படக்கூடிய செல்வமாக இருக்க வேண்டும்.
அயலானைக் கண்டுகொண்டு விண்ணகத்தில் நம் செல்வத்தை சேர்த்து வைப்போம்.
ஆலயத்தில் நாம் பெறும் நற்கருணை வெறும் அப்பமாக பார்க்கப்பட்டால் அது வெறும் அப்பம் தான்.
உண்மையிலே, நற்கருணையில் இறைவன் உறைகிறார் என்று நம்பினால் தான் அது இயேசுவின் உடலாக தெரியும்.
நம் வாழ்வில் இயேசுவின் உடல் ஆற்றலை கொடுக்க வேண்டும் என்றால் நாம் அவரில் உறவுக் கொள்ள வேண்டும்.
அவரில் உறவுக் கொள்ள வேண்டும் என்றால் அடுத்தவருக்கு அன்பைக் காட்ட வேண்டும்.
அன்பில்லா நற்கருணைக் கொண்டாட்டம் கடவுளின் விருந்து அல்ல.
No comments:
Post a Comment