24_08

தூய்மை நிறைந்த அன்னை மரியா!


பொதுக் காலம் 19ஆம் வாரம்

15.08.2024 - வியாழக் கிழமை 

புனித கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழா

புனித கன்னி மரியாவின் விண்ணேற்பைக் குறித்து பாரம்பரியமாகச் சொல்லப்படும் சொல்லப்படும் நிகழ்வு ஒன்று உள்ளது. மரியா தன்னுடைய கடைசிக் காலத்தைச் சீயோன் மலையருகில் இருந்த ஓர் இல்லத்தில் செலவழித்தார். அப்போது வானதூதர் அவருக்கு தோன்றி அன்னை மரியாவின் இறப்பு எவ்வாறு இருக்கும் என்பதை சொல்லிவிட்டு மறைந்து விட்டார்.

வானதூதர் சொன்னவாறே, குறிப்பிட்ட நாளில் அன்னை மரியா இறந்தார். இவருடைய இறப்புச் செய்தியைக் கேள்விப்பட்டு தோமாவை தவிர எல்லாச் சீடர்களும் அங்கு வந்தார்கள். பின்பு அன்னை மரியாவைக் கல்லறையில் அடக்கம் செய்துவிட்டுத் திரும்பிவிட்டார்கள். அடக்க நிகழ்வுகள் முடிந்த பிறகு இந்த செய்தி தோமாவின் காதை எட்டியது.

தோமா சீடர்களிடம் வந்து, “நான் இறந்த மரியன்னையின் உடலைக் கண்டால் ஒழிய நம்பமாட்டேன்” என்று சொல்ல, அவர்களும் தோமாவை கல்லறைக்கு கூட்டிக் கொண்டு சென்றார்கள். கல்லறையை திறந்து பார்த்த போது மரியன்னையின் உடல் அங்கு இல்லை. மரியன்னை ஆன்மாவோடும் உடலோடும் விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதை எல்லோரும் நம்பத் தொடங்கினர்.

புனித கன்னி மரியாவின் விண்ணேற்பு என்பது, அவர் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்ததினால் அவருக்கு கிடைத்த மாபெரும் பெரும்கொடை.

3ஆம் நூற்றாண்டில் மரியா விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதைக் குறிக்கும் விதமாக மக்கள் விண்ணகம் நோக்கி மன்றாட தொடங்கினர். 5ஆம் நூற்றாண்டில் இவ்விழா ‘மரியாவின் துயில்’ என்று கொண்டாடப்பட்டது. 1950ஆம் ஆண்டு திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் அவர்கள் ‘மரியன்னையின் விண்ணேற்பை’ நம்பிக்கை கோட்பாக அறிவித்ததில் இருந்து மரியன்னையின் விண்ணேற்பு விழா ஆகஸ்ட் 15ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 1:39-56) பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? என்று எலிசபெத் அன்னை மரியாளை வாழ்த்துகிறார். எலிசபெத் அன்னை மரியாவை வாழ்த்தியது தூய ஆவியினால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில் தான். 

அன்னை மரியாவும் தூய ஆவியால் நிரப்பப்பட்டார்; எலிசபெத்தும் தூய ஆவியால் நிரப்பப்பட்டார்.

அன்னை மரியாவின் விண்ணேற்பு பெருவிழா நமக்கு உணர்த்தும் செய்தி, கடவுள் படைத்த இந்த உடல் தூயது, அதை தூய்மையோடு பேணி காக்க வேண்டியது நமது கடமை.

கடவுளின் அருள் எல்லா மனிதரிலும் தங்கி இருக்கிறது, அந்த அருளை இழக்காமல் மற்றொருவருக்கு அந்த அருளை கொடுக்க வேண்டியது மனிதனின் பொறுப்பு.

சீராக் 34:4இல் சொல்லப்பட்டுள்ளது, "தூய்மையின்மையிலிருந்து தூய்மை வரக்கூடுமோ? பொய்மையிலிருந்து உண்மை வரக்கூடுமோ?". நிச்சயமாக தூய்மையற்றதிலிருந்து தூய்மையானது வர முடியாது. 

இயேசு தூய்மையானவர் என்று சொன்னால் அவரைப் பெற்றெடுத்த அன்னை மரியாவும் நிச்சயம் தூய்மையானவர் தான். நல்ல மரம் நல்ல கனியை தானே கொடுக்க முடியும். 

அன்னை மரியா தூய ஆவியால் நிரப்பப்பட்ட கனி கொடுக்கும் நல்ல மரமாக திகழ்ந்தார்.

1 அரசர்கள் 8:10,11இல் "குருக்கள் தூயகத்தினின்று வெளியே வருகையில் ஒரு மேகம் ஆண்டவரின் இல்லத்தை நிரப்பிற்று. அம்மேகத்தின் பொருட்டு குருக்கள் திருப்பணி புரிய அங்கு நிற்க இயலவில்லை. ஏனெனில் ஆண்டவரின் மாட்சி அவர் இல்லத்தை நிரப்பிற்று". என்று வாசிக்கிறோம். 

அன்னை மரியாவும் தூய ஆவி என்னும் மேகத்தால் மூடப்பட்ட கடவுள் உறையும் ஒரு ஆலயம் தான்.

இறைவன் கொடுத்த தூய்மையை அருளை இறுதிவரை காத்த அன்னையை இறைவன் தனக்கென்று விண்ணகத்திற்கு எடுத்துக் கொண்டார்.

அன்னை மரியாவின் ஆன்மாவும் உடலும் அழியாமல் கடவுள் அவரைக் காத்தார்.

அன்னை மரியாவை போல கடவுள் தந்த உடலை தூயதாக பேணுவோம். 

இறைவன் உறையும் ஆலயமாக நம் உள்ளம் மாறட்டும்.


No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...