பொதுக் காலம் 19ஆம் வாரம்
14.08.2024 - புதன் கிழமை
ஒருவர் தவறும் போது கண்டிக்க வேண்டிய இடத்தில் இருப்பவர் கண்டிக்க வேண்டும். தொடக்கத்திலே கண்டிக்கவில்லை என்றால் பிரச்சினை பெரிதான பின்பு ஒன்றும் செய்ய இயலாது.
துடுப்பு இல்லாத படகு சரியான பாதையை அடைந்திட முடியாது என்பது போல, கண்டிப்பும் கட்டுப்பாடும் இல்லா வாழ்வு நன்மை அடைந்திடாது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 18:15-20) ஒருவர் உங்களுக்கு எதிராக பாவம் செய்தால் அவர் தனித்திருக்கும் போது, அவரது குற்றத்தை எடுத்துக் காட்டுங்கள்.
செவிசாய்த்தால் நல்லது, இல்லையென்றால் இரண்டு அல்லது மூன்று சாட்சிகள் மூலம் எடுத்துச் சொல்லுங்கள். அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருஅவையிடம் கூறுங்கள். அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் பிற இனத்தவரை போல இருக்கட்டும் என்கிறார் இயேசு.
யார் தான் தவறு செய்யாதவர்கள்? என்ற கேள்வி தான் எல்லோரையும் தவறிலேயே நிலைத்திருக்க வைக்கிறது.
நல்லதை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் நல்லதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் எல்லோருக்கும் வருவதில்லை.
ஏன் குற்றம் பெருகிறது இந்த கேள்விக்கு சபை உரையாளர் 8:11 இவ்வாறு சொல்கிறது, மக்கள் தீமை செய்யத் துணிவதேன்? தீமை செய்வோருக்கு விரைவிலேயே தண்டனை அளிக்காததுதான் இதற்குக் காரணம்".
நம் குறைகளை மற்றவர்கள் சுட்டிக்காட்டும் போது அதை ஏற்றுக் கொண்டால் நம் வாழ்வு சிறப்பானதாக அமையும்.
No comments:
Post a Comment