24_08

அன்பின்றி உலகு இயங்காது...


பொதுக் காலம் 20ஆம் வாரம்

23.08.2024 - வெள்ளிக் கிழமை 

"அன்னியருக்கு அன்பு காட்டுங்கள்; ஏனெனில் எகிப்தில் நீங்களும் அன்னியராய் இருந்தீர்கள்" - இணைச் சட்டம் 10:19

அன்பு இல்லாத மனிதர் அரை மனிதர். யாரிடம் தான் அன்பு இல்லை! இயற்கை அனைத்திலும் அன்பு நிறைந்திருக்கிறது. ஆனால் மனிதனிடத்தில் மட்டும் தான் அன்பு குறைவுபட்டு காணப்படுகிறது. 

எது தனக்குரியதோ அதனிடம் முழுமையான அன்பு காட்டாத மனிதன் தன்னை சாராத ஒன்றை தேடி அலைந்து கொண்டிருக்கிறான். 

நிறைவு தராத ஒன்றின் மீது நிலையான காதல்/அன்பு கொண்டு மனிதன் இந்த உலகை சுற்றி வருகிறான். பக்கத்தில் இருப்பவரிடம் இரக்கம் காட்டாதவர்கள்/அன்பு செய்யாதவர்கள் தொலைதூரத்தில் இருப்பவர்களுக்கு அலைபேசி மூலம் அன்புச் செய்திகள் அனுப்புகிறார்கள்.

அன்பிற்காக சில நபர்கள் ஏங்கி ஏங்கி வாழ்க்கையில் வீழ்ந்தே போய்விட்டார். உடன்பிறப்புகளிடம், கணவன் மனைவியிடம், பிள்ளைகளிடம் அன்பை எதிர்பார்க்கும் போது சிலருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 22:34-40) பரிசேயர் கேட்ட கேள்வி, போதகரே! திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது? என்பதுதான்.

தெரியாமல் பரிசேயர் அந்த கேள்வியை கேட்கவில்லை. எல்லாம் அறிந்த நிலையில் இயேசுவை சோதிப்பதற்காக இந்த கேள்வி கேட்கப்படுகிறது. 

இன்று நம்மை சோதிப்பவர்கள் ஏராளம். நல்லவர்கள் போல தங்களை காட்டிக்கொண்டு நம்மிடம் இருந்து பொருட்களை, பதவியை, பணத்தை பெறுவதற்காக போலி அன்பு காட்டுபவர்கள் அதிகம்.

ஒரு மனிதருக்கு மற்றொரு மனிதர் சளைத்தவர்கள் அல்ல என்பது போல போட்டி போட்டு இன்று போலியான அன்புகள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. 

ஆனால் சோதனைகளை கூட சாதனையாக மாற்றக்கூடிய இயேசு, முதன்மையான கட்டளை, கடவுளிடம் அன்பு செலுத்துவது என்றும் அதற்கு இணையான கட்டளை அடுத்திருப்பவர் மீதும் அன்பு செலுத்துவதும் தான் என்கிறார்.

கண்ணுக்கு தெரியாத கடவுளை அன்பு செய்வது மிக எளிது. காரணம், கடவுள் விரும்பாத கடவுளுக்கு தேவைப்படாத பலிகளையும் படையல்களையும் காணிக்கைகளையும் கொடுத்து கடவுளை அன்பு செய்துவிடலாம் என்று நம்புவோர் பலர். பலியை அல்ல இரக்கத்தை விரும்புகிறேன் என்றவர் இறைவன்.

திருச்சட்டம் இறைவாக்கு இரண்டிலும் அடிப்படையாக இருப்பது அன்பு தான். 

அன்பை அளந்து விட முடியாது. அன்பை பணம் கொடுத்து பெற்றுவிட முடியாது. 

உள்ளத்திலிருந்து புறப்படக்கூடியது தான் அன்பு. மனிதரை அன்பு செய்யாமல் கடவுளை அன்பு செய்துவிடலாம் என்று சொல்வோர் பொய்யர். அயலானில் இறைவனை காணாத அடுத்திருப்பவரில் இறைவனின் சாயலை உணராத மனிதர் எப்படி கடவுளை அன்பு செய்ய முடியும்? 

நாம் இறைவனின் சாயலிலும் உருவிலும் படைக்கப்பட்டிருக்கிறோம். அடுத்தவரிலும் இறைவனின் சாயல் உரு இருக்கிறது என்பதை உணர்ந்தோம் என்றால் இயல்பாக நம்மிலிருந்து எதையும் எதிர்பாராத அன்பு ஊற்றெடுக்கும்.

உலகு அன்பு இன்றி ஒருபோதும் இயங்காது...

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...