31.08.2024 - சனிக் கிழமை
ஒவ்வொருவருக்கும் (திறமை/ஆற்றல்) கொடுக்கப்பட்டுள்ளது, ஒவ்வொருவரிடமிருந்தும் திரும்ப எதிர்பார்க்கப்படும்.
மனிதர்கள் ஒருவர் மற்றொருவரிடம் கொடுத்ததையே (அன்பு/பணம்) கணக்கு கேட்க தவறுவதில்லை. கொடுத்த பணத்திற்கும் அதிகமாக வட்டியோடு சேர்த்துக் கொள்வதுதான் மனிதருடைய நிலையாக இருக்கிறது. கடவுளிடமிருந்து கொடையாக பெற்றதையே, மற்றவர்களுக்கு கடனாக கொடுத்து அதில் வருமான ஈட்டும் எண்ணம் உடைய மனிதர்கள் நாம்.
ஆனால் கடவுள் தாம் கொடுத்த ஆற்றலையும், சக்தியையும் மனிதன் சக மனிதனுடைய வளர்ச்சிக்காக பயன்படுத்த அழைப்பு விடுக்கிறார். பயன்படாமல், பலன் கொடுக்காமல் இருக்கும் மனிதரின் வாழ்வு தேவையற்ற ஒன்று.
இன்றைய நற்செய்தி வாசகமானது (மத்தேயு 25:14-30) நெடும் பயணம் மேற்கொள்ள இருந்த ஒருவர், தம் பணியாளர்களுக்கு அவரவர் திறமைக்கு ஏற்ப கொடுத்த தாலந்தை பற்றி விளக்குகிறது. இந்த தாலந்து உவமையோடு விண்ணரசு ஒப்பிடப்படுகிறது.
ஒருவரிடம் ஐந்து தாலந்தும் வேறொருவரிடம் இரண்டு தாலந்தும் இன்னொருவரிடம் ஒரு தாலந்து கொடுக்கப்படுகிறது. ஐந்து, இரண்டு தாலந்தை பெற்றவர்கள் அதை மேலும் பெருக்கிக் கொள்கிறார்கள். ஆனால் ஒரு தாலந்து பெற்றவர் அதை புதைத்து வைக்கிறார்.
இந்த தாலந்து எதை குறிக்கிறது? கடவுள் ஒவ்வொருவருக்கும் கொடுத்த திறமையை குறிக்கிறது. திறமையை பயன்படுத்தாதோர் நிலைமையும் ஒரு தாலந்தை பெற்றவர் நிலையும் ஒன்றே. (இது தனக்கும் பிறருக்கும் பயன்படா வாழ்வு).
வாய்ப்பை பயன்படுத்தியோருக்கு மேலும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. வாய்ப்பை பயன்படுத்தாதோருக்கு இழப்பு தான்.
இல்லாதோரிடமிருந்து அவரிடம் உள்ளதும் எடுக்கப்படும் என்கிறது இன்றைய நற்செய்தி. இங்கு இல்லாதவரிடமிருந்து எப்படி உள்ளதும் எடுக்க முடியும்? இந்த கேள்வி எழலாம். ஒவ்வொருவருக்கும் தாலந்து (திறமை) கொடுக்கப்பட்டுள்ளது. அந்த திறமையை சரிவர பயன்படுத்தாத போது அவரிடம் உள்ள திறமையும் எடுக்கப்படும் என்பதுதான் இதன் அர்த்தமாக இருக்கிறது.
இறைவன் தீர்வு நாளில் நடுவர் இருக்கையில் அமர்ந்திருக்கும் போது, நம்மிடம் எழுப்ப போகும் கேள்வி, உன்னிடம் நான் கொடுத்த தாலந்தை என்ன செய்தாய்? என்பதுதான். எனக்கு ஒன்றும் கொடுக்கப்படவில்லை என்று நாம் பதில் சொல்ல முடியாது.
தாலந்து என்னும் திறமையை நான் பயன்படுத்தினேனா அல்லது எனக்குள்ளே முடக்கி வைத்தேனா என்பது நான் சிந்திக்க வேண்டிய ஒன்று.
திறமையை பயன்படுத்தாத போது நாம் பயனற்ற மனிதர்களாய் மாறிவிடுகிறோம். பலன் கொடுக்கும் மனிதர்களாக, தாலந்தை பெருக்கும் மனிதர்களாக வாழ முயற்சி செய்வோம்.
No comments:
Post a Comment