பொதுக் காலம் 20ஆம் வாரம்
22.08.2024 - வியாழக் கிழமை
"அந்த வானதூதர் என்னிடம், 'ஆட்டுக்குட்டியின் திருமண விருந்துக்கு அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர்’ என எழுது” என்று கூறினார். தொடர்ந்து, “இவை கடவுளின் உண்மையுள்ள சொற்கள்” என்று சொன்னார்" - திருவெளிப்பாடு 19:9
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 22:1-14) விண்ணரசானது திருமண விருந்துக்கு ஒப்பிடப்படுகிறது. திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களோ தகுதியற்று போனார்கள் அழைக்கப்பட்டவர்கள் பலராக இருந்தாலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சிலராக இருந்தனர் என்பதை நற்செய்தி வாசகம் தெளிவுப்படுத்துகிறது.
விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் விருந்துக்கு வராமல் இருக்க பல காரணங்களை சொல்லிக் கொண்டே சென்றார்கள். ஒருவர் தம் வயலுக்கு சென்றார், ஒருவர் கடைக்கு சென்றார், மற்றவர்களோ தலைவருடைய பணியாளர்களை பிடித்து இழிவுப்படுத்தி கொலை செய்தார்கள்.
மேலோட்டமாக, இன்றைய நற்செய்தி வாசகத்தை பார்க்கின்றபோது திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் வரவில்லை. ஏன், தலைவர் அவர்களை கட்டாயப்படுத்த வேண்டும்? என்று தோன்றலாம்.
ஆனால், இங்கு இந்த திருமண விருந்து என்பது இறையாட்சியின் விருந்து. இயேசு தரும் விண்ணக விருந்துக்கு அனைவரும் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் அழைப்பை நிராகரித்து, இவ்வுலக வாழ்விலே இன்பம் காண எண்ணுகிறார்கள் என்பதைத்தான் மேலே காரணங்களை சொல்லும் மனிதர்களை வைத்து நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
வாய்ப்பு ஒரு தடவை தான் கதவை தட்டும் என்பார்கள். ஆனால் இந்த தலைவரோ இரண்டு முறை வாய்ப்பை கொடுக்கிறார். இறுதியில் அழைப்பை ஏற்காத, தன் அழைப்பை இழிவு படுத்திய கொலையாளிகளை கொன்று நகரத்தை தீக்கிரையாக்குகிறார்.
அதோடு நின்று விடவில்லை தலைவர், சாலையோரங்களில் காணும் எல்லோரையும் திரும்ப விருந்துக்கு அழைத்து வரச் சொல்கிறார். அப்படி அழைக்கப்பட்டோரில் நல்லோர், தீயோரால் திருமண மண்டபம் நிரம்பியிருந்தது. அரசர் பார்வையிட வருகின்ற போது ஒருவர் திருமண ஆடை அணியாத நிலையில் இருப்பதைக் கண்டு அவர் மீது கோபம் கொள்கிறார். அவரை புறம்பே உள்ள இருளில் தள்ளச் சொல்கிறார்.
(சாலையோரங்களில் இருக்கக்கூடிய இவரிடம் எப்படி திருமண ஆடை இருக்கும்? என்ற கேள்வி எழலாம். யூதர்களுடைய திருமண நிகழ்வுகளில் திருமண மண்டபத்திற்கு வெளியே திருமண ஆடைகள் வைக்கப்பட்டிருக்கும். அதைக் கூட அணியாத சோம்பேறியாக இருந்த காரணத்தினால் தலைவர் கோபப்படுகிறார்)
அழைக்கப்பட்டோரில் நல்லோர் தீயோர் இருந்தனர். அந்த அழைப்பின் வழியாக அவர்கள் மனமாற வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
தகுதி உடையவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள், திருமண விருந்தில் கலந்து கொண்டார்கள்.
நாம் விண்ணரசில் நுழைய அழைப்பு (மனமாற்றத்திற்கான அழைப்பு) கொடுக்கப்படுகிறது.
தகுதியற்ற நிலையில் இருந்து நம்மை தகுதிப்படுத்திக் கொள்வது தான் விண்ணரசிற்கான நுழைவு சீட்டு.
சாக்குபோக்கு சொல்லி காலம் தாழ்த்துவதை விட 'இதோ வருகிறேன்' என்று பதில் கொடுப்போம்.
வார்த்தையும் வாழ்வும் இணைந்து பயணிக்கட்டும்.
அரசியான புனித கன்னி மரியா
புனித கன்னி மரியாவை விண்ணக மண்ணக அரசியாக பாவித்து முறைப்படி விழா கொண்டாடுகின்ற வழக்கம் 1954ஆம் ஆண்டு திருத்தந்தை பன்னிரண்டாம் பயசால் ஏற்படுத்தப்பட்டது.
‘குயின் ஆப் ஹவென்’ (Queen of Heaven) என்னும் மடலில், மரியா ஆண்டவரின் தாயாக இருப்பதாலும் மீட்புத் திட்டத்தில் இறைவனோடு பங்கு எடுத்ததாலும், கருவில் உதிக்கும் போது பாவக்கறை இல்லாமல் பிறந்ததாலும், விண்ணகத்தில் இயேசுவுக்கு மிக அருகில் நமக்காக பரிந்து பேசுவதாலும் இப்பேற்றினை பெறுகின்றார் என்று கூறி இவ்விழாவை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ஆம் நாள் கொண்டாட திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ் பணித்தார்.
அன்னை மரியாவை விண்ணக மண்ணக அரசியாக ஏற்று விழாவாக கொண்டாடும் வழக்கம் 1954ஆம் ஆண்டுதான் உருவாக்கப்பட்டது என்றாலும் 16ஆம் நூற்றாண்டிலிருந்தே அன்னை மரியாவை அரசியாக பாவிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. கிருபை தயாபத்துக்கு மாதாவாக இருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க... என்ற இறைவேண்டல் இதற்கு சான்று.
இயேசு அரசருக்கெல்லாம் அரசர் அப்படியானால் இயேசுவை பெற்றெடுத்த மரியா, அரசரின் தாய் என்ற முறையில் அரசி என்று அழைக்கப்படுவது தகுதியானது.
(நூல் - மகத்தானவர்கள்)
No comments:
Post a Comment