பொதுக் காலம் 20ஆம் வாரம்
20.08.2024 - செவ்வாய்க் கிழமை
"அவர்கள் கடவுளின் மறைவான திட்டங்களை அறியவில்லை; தூய வாழ்வுக்குக் கைம்மாறு உண்டு என்று நம்பவில்லை; மாசற்றவர்களுக்குப் பரிசு கிடைக்கும் என்று உய்த்துணரவில்லை" - சாலமோனின் ஞானம் 2:22
நான் இதை உனக்கு செய்தால் எனக்கு என்ன இலாபம்? நான் என்னுடைய நேரத்தையும் உழைப்பையும் விட்டுவிட்டு உனக்காக செய்யக்கூடிய இந்த காரியத்திற்கு நீ எனக்கு தரக்கூடிய வெகுமதி என்ன? இந்த காரியத்தை நான் முடித்து தர நீ எனக்கு என்ன தருவாய்?
இந்தக் கேள்விகள் நாம் சந்திக்கும் மனிதர்களின் அல்லது நமக்கு உதவும் மனிதர்களின் வெளிப்படையான அல்லது மனதில் எழும் கேள்வியாக இருக்கலாம். யாரும் பலனை எதிர்பாராமல் யாருக்கும் உதவி செய்வதில்லை. ஒருவேளை வெளிப்படையாக எதையும் கேட்காவிட்டாலும் மறைமுகமாக கைம்மாறு எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் பணத்தாலே மக்களுக்கு செய்யப்படும் திட்டங்களுக்கு பணம் லஞ்சமாக, கல்வி கற்பதற்கு பணம் நன்கொடையாக, கடவுளை விரைந்து தரிசிக்க (அ) அருளடையாளங்களைப் பெற நன்கொடை/உபயம் எனும் பெயரில் பணமாக என்று சிலருக்கு சில சில்லறைகள் கிடைத்தால் தான் சில காரியங்கள் நகர்கிறது.
ஒன்றை செய்வதற்காக ஒன்று இவ்வுலகில் பெறப்படுகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 19:23-30) நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மை பின்பற்றியவர்கள் ஆயிற்றே, எங்களுக்கு என்ன கிடைக்கும் என்று பேதுரு இயேசுவை பார்த்து கேட்கிறார். இந்த பகுதிக்கு முன்னதாக செல்வர் விண்ணரசில் புகுவது கடினம், "செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதை விட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்று இயேசு சொல்லி இருக்க, எங்களுக்கு என்ன கிடைக்கும் என்பது பேதுருவின் கேள்வியாக இருக்கிறது.
(ஊசியின் காது என்பது ஒரு நகரத்தின் நுழைவாயிலை குறிக்கிறது. யூதர்கள் தங்களுடைய நகரப் பகுதியில் இரண்டு வாயில்களை பயன்படுத்துவார்கள். ஒன்று, வாணிபத்திற்காக மற்றொன்று, மக்களின் பயன்பாட்டிற்காக (நடமாட்டத்திற்காக). இரவு வேளை ஆகின்றபோது வாணிபத்திற்கான வாயில் அடைக்கப்படும். (மக்கள் பயன்பாட்டிற்காக இருக்கக்கூடிய நுழைவாயில் என்பது ஊசியின் காது என்று அழைக்கப்படுகிறது).
பொதிகளோடு பொருட்களோடு வரக்கூடிய வணிகர்கள் ஒட்டகத்தோடு அந்த குறுகலான 'ஊசியின் காது' என்று அழைக்கப்படும் வாயிலை கடந்து செல்ல முடியாது. எல்லாவற்றையும் கீழே இறக்கி வைத்து ஒன்றன்பின் ஒன்றாக தான் உள்ளே எடுத்துச் செல்ல முடியும். எனவேதான் இயேசு சொல்கிறார், ஊசியின் காதின் வழியே ஒட்டகம் கூட நுழைந்து விடலாம். ஆனால் செல்வர் (செல்வத்தோடு, ஆணவத்தோடு, புகழோடு, கர்வத்தோடு) இறையாட்சிக்கு உட்பட முடியாது. எதையெல்லாம் இறக்கி வைக்க வேண்டுமோ அவற்றையெல்லாம் இறக்கி வைக்க வேண்டும்.
அன்று பேதுரு எழுப்பி கேள்வியைப் போல கிறித்தவர்களாக, கிறிஸ்துவை பின்பற்றுவர்களாக இருக்க கூடிய நமக்கு என்ன கிடைக்கும்? (விண்ணக வாழ்வு/நிலை வாழ்வு) என்பது நம் கேள்விதான்.
ஊசியின் காது என்ற நுழைவாயிலின் முன் இறக்கி வைக்கப்பட வேண்டியவை எல்லாம் இறக்கி வைக்கப்பட வேண்டும் என்பது போல நம் உள்ளத்திலும் நம் வாழ்விலும் சிலவற்றை நீக்க, இறக்கி வைக்க, ஒதுக்கி வைக்க வேண்டி உள்ளது.
உறவுகளை எதிர்க்க அல்ல இழக்க வேண்டும் என்பதுதான் இயேசுவின் பதில். நன்மை செய்வதற்கு தடையாய் உள்ள அனைத்து உறவுகளையும் இழக்க வேண்டும்.
என் குடும்பம் என் சொந்தம் என்று சொல்லி ஊரின் வளர்ச்சியை சிதைப்பதற்க்காக நன்மையான காரியங்கள் தடைப்படுவதற்காக நாம் முன் வரக்கூடாது.
நிலை வாழ்வின் அடிப்படை இவ்வுலக வாழ்வில் நன்மை செய்வதுதான். நல்லோரையும் நன்மையையும் எதிர்ப்பது பாவம்...
நன்மை செய்வோருக்கு/ கிறிஸ்துவின் கொள்கைக்காக இழப்பை கண்டவருக்கு, எல்லாம் அமுக்கி குலுக்கி சேர்த்து கொடுக்கப்படும். நிலைவாழ்வும் உண்டு...
No comments:
Post a Comment