17.08.2024 - சனிக் கிழமை
"தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள்; பழிச்சொல்லுக்குப் பழிச் சொல் கூறாதீர்கள்; மாறாக, ஆசி கூறுங்கள். ஏனென்றால் கடவுள் வாக்களித்த ஆசியை உரிமையாக்கிக் கொள்வதற்கே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்" - 1பேதுரு 3:9
கடவுளின் ஆசிரை பெற நம் உள்ளங்கள் இலகுவாக வேண்டும். கடினமான பாறையின் மீது செடி முளைப்பதற்கான வாய்ப்பு இல்லாது இருப்பது போல, கடினமான இதயத்தின் மீது இறைவனின் ஆசிரும் தங்குவதில்லை. (மனம் கடினப்பட்டிருந்தால், இறை ஆசிர் இருப்பதை உணர முடியாது).
இன்றைய முதல் வாசகத்தில் ஒரு அருமையான வசனம் இடம் பெறுகிறது. "ஒவ்வொரு மனிதரையும் அவருடைய வழிகளைக் கொண்டே நான் தீர்ப்பிடுவேன்" (எசேக்கியேல் 18:30).
தந்தை நீதியை, நேர்மையை கடைப்பிடித்து, பசித்தவனுக்கு உணவளித்து, ஆடையின்றி இருப்பவனுக்கு ஆடை கொடுத்து, வட்டிக்கு கொடாமல், அநீதி செய்யாது, உண்மை உள்ளனவராய் நடந்து, நீதிமானாக வாழ்கிறார். ஆனால் தந்தை வழியில் மகன் செல்லவில்லை. தந்தை கடைபிடித்து வந்த நேர்மையான காரியங்களை மகன் கடைபிடிக்காமல் அநீதியோடு வாழ்கிறான்.
தந்தை செய்த நன்மைக்கேற்ற கைம்மாறு தந்தைக்கும், மகன் செய்த தீமைக்கு ஏற்ற கைம்மாறு மகனுக்கும் கிடைக்கும். ஏனென்றால் ஒருவரின் செயலின் பொருட்டே அவருக்கு தண்டனை உண்டு என்பதை கடவுள் இங்கு உறுதிப்படுத்துகிறார்.
நீதியை கடைப்பிடிப்பவருக்கு ஆசி, அநீதியோடு நடப்பவருக்கு தண்டனை.
மனிதர்கள் நன்மைக்கு பதிலாக தீமையை செய்யலாம். ஆனால், நன்மை செய்பவருக்கு கடவுளிடமிருந்து என்றும் ஆசீர் உண்டு.
மாசற்ற உள்ளதோடு வாழ்வோருக்கும் கடவுளின் ஆசிர் உண்டு.
மற்றவர்களுக்கு நல்லது செய்யவில்லையென்றாலும், நாம் தீங்கு செய்யாமல் இருந்தோம் என்றால் அதுவே ஒரு வகையில் நன்மைதான்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 19:13-15) சிறு பிள்ளைகள் மேல் இயேசு தம் கைகளை வைத்து வேண்டுதல் செய்யுமாறு, பிள்ளைகளை சிலர் இயேசுவிடம் கொண்டு வந்தனர். ஆனால் சீடர்களோ அவர்களை அதட்டினர். ஆனால் இயேசுவோ அவர்களை தடுக்காதீர்கள். விண்ணரசு அவர்களுக்கு உரியது என்று சொல்லி அவர்களை தொட்டு ஆசி வழங்கினார்.
கள்ளம் கபடு இல்லாத குழந்தை மனம் நமக்கு இறையாசிரை பெற்று தரும்.
குழந்தைகளுக்குரிய புன்முறுவல் நம்மிடம் இருக்கட்டும். இறைஆசிர் நம்மில் தங்கட்டும்.
No comments:
Post a Comment