பொதுக் காலம் 18ஆம் வாரம்
10.08.2024 - சனிக் கிழமை
"துன்பக்காலத்தில் நான் அஞ்சுவானேன்? என்னை வளைத்துக்கொண்டு கொடுமைப்படுத்தும் வஞ்சகர்க்கு நான் அஞ்சுவானேன்? - திருப்பாடல்கள் 49:5
திருத்தொண்டர் லாரன்ஸ் ஸ்பெயின் நாட்டில் உள்ள ஹுஸ்கா என்னும் நகரில் பிறந்து வளர்ந்தார். திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்துஸ் மறைப் போதக பணிக்காக சென்றபோது லாரன்ஸை சந்திக்க நேர்ந்தது.
அவரை தன்னோடு உரோமை நகருக்கு அழைத்துச் சென்று முதன்மைத் திருத்தொண்டராக நியமித்தார்.
திருத்தொண்டர் லாரன்ஸ்க்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகள் இரண்டு. ஒன்று, இயேசுவின் திருவுடலையும் திருஇரத்தத்தையும் இறைமக்களுக்கு பகிர்ந்து கொடுப்பது இரண்டாவது திருஅவையின் சொத்துகளுக்கு பொறுப்பாய் இருந்து அவற்றை, தேவைப்படும் ஏழை, எளிய மக்களுக்கு பகிர்ந்து கொடுப்பது.
இந்தக் கால கட்டத்தில், உரோமை நகரை வலேரியன் என்ற கொடுங்கோலன் ஆட்சி செய்து வந்தான். கிறித்தவர்களை துன்புறுத்துவதற்கு முன் கிறிஸ்தவ தலைவர்களை மிகவும் கொடுமைப்படுத்தி வந்தான்.
அப்போது திருத்தந்தையாக இருந்த இரண்டாம் சிக்ஸ்துஸ் என்பவரை அவர் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருக்கும் போது சிறைப் பிடித்தான். திருஅவைவின் அனைத்து சொத்துக்களையும் அரசாங்கத்தின் ஒப்படைக்க வேண்டும் என்று அரசன் கட்டளையிட்டான்.
இந்த தருணத்தில் திருஅவையின் சொத்துகளுக்கு பொறுப்பாக இருந்த திருத்தொண்டர் லாரன்ஸ் திருஅவையின் அனைத்து சொத்துக்களையும் கைவிடப்பட்டோர், உடல் ஊனமுற்றோர், அனாதை, ஏழை எளிய மக்களுக்கு பகிர்ந்து கொடுத்தார்.
அரசன் திருத்தொண்டர் லாரன்சை அழைத்து சொத்துக்களை ஒப்படைக்கச் சொன்னபோது, ஏழை எளிய மக்களை அழைத்து வந்து 'இவர்கள்தான் திருஅவையின் சொத்து' என்று அரசரின் முன் நிறுத்தினார்.
இதனால் கோபம் அடைந்த அரசன் இரும்பு கட்டிலில் தீயை மூட்டி, அதில் திருத்தொண்டர் லாரன்சை படுக்க வைத்தார். சிறிது நேரத்திற்கு பிறகு உடலின் ஒரு பகுதி முழுவதும் எரிந்து விட்ட நிலையில், அங்கிருந்தவர்களை பார்த்து என்னுடைய உடல் ஒரு பக்கம் நன்றாக எரிந்துவிட்டது, இன்னொரு பக்கம் சரியாக எரியவில்லை. அதனால் என்னுடைய உடலை திருப்பி போடுங்கள் என்று திருத்தொண்டர் லாரன்ஸ் கூறினார்.
இதைக் கேட்ட அங்கிருந்தவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டு போனார்கள்.
மத்தேயு 10:28 இவ்வாறு சொல்கிறது, "ஆன்மாவைக் கொல்ல இயலாமல். உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்"
மனிதருக்கு அஞ்சாமல் கடவுளுக்கு அஞ்சியதால், இறப்பை துணிச்சலோடு எதிர்கொண்டார் திருத்தொண்டர் லாரன்ஸ்.
அந்த அளவுக்கு கிறிஸ்துவையும் கிறிஸ்துவின் திரு அவையையும் நேசித்தவர் திருத்தொண்டர் லாரன்ஸ்.
தனது உயிரை ஒரு பொருட்டாக எண்ணாமல், திருஅவையின் சொத்துக்களாக ஏழை, எளிய மக்களை எண்ணி அதற்காக தனது உயிரை தியாகம் செய்தார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 12:24-26) இயேசு கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால் தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என்கிறார் இயேசு.
கோதுமை மணி மடிவது பலனை கொடுப்பதற்காக. ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றை பெற்றுக் கொள்ள முடியும். தியாகம் இல்லை என்றால் வாழ்வு இல்லை.
இயேசுவினுடைய பணிவாழ்வு அதைத்தான் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. தன்னைக் கொடுத்தார் இத்தரணி உயர.
அவரது வார்த்தையை பின்பற்றி கிறிஸ்துவுக்காக தனது இன்னுயிரை தியாகம் செய்தவர் தான் திருத்தொண்டர் லாரன்ஸ்.
ஒருவேளை கிறிஸ்துவை சாராத வாழ்வாக நம் வாழ்வு இருந்தது என்று சொன்னால் நாம் எதை குறித்தும் யாரைக் குறித்தும் கவலைப்பட வேண்டியது இல்லை (நமக்கென்று கொள்கையும் இருக்காது கோட்பாடும் இருக்காது).
நம் வாழ்வு கிறிஸ்துவை சார்ந்து இருக்கிறது என்றால் இழப்பை சந்திக்க முன்வர வேண்டும். அந்த இழப்பு பிறருக்கு வாழ்வு கொடுப்பதாய் இருக்க வேண்டும்
மனிதருக்கு அஞ்சி அஞ்சி கோழையாய் வாழ்வதை விட, கடவுளுக்கு அஞ்சி விண்ணக வீரராய் வாழ்வதே மேல்.
No comments:
Post a Comment