பொதுக் காலம் 17ஆம் வாரம்
02.07.2024 - வெள்ளிக் கிழமை
நம்பிக்கையில் வலுவற்றவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள்; ஆனால் கருத்து வேறுபாடுகளைப் பற்றி அவர்களோடு வாதாடாதீர்கள்" - உரோமையர் 14:1
சில வேளையில் நம்முடைய வாழ்க்கை வியப்புக்குரியதாக இருக்கிறது. எப்படி நம்முடைய வாழ்க்கையில் இந்த நிகழ்வு நடந்தது என்று மற்றவர்கள் வியந்து பார்க்கும் வகையில் அது இருக்கிறது.
அதே வேளையில், நம்மிடமிருந்து வாழ்வு பெற்றவர்கள், நம்மை நிராகரிக்கவும் செய்கிறார்கள். வியந்து போற்றியவர்கள் நம்மை நிராகரிக்கும் போது நம் மனதின் கவலை எல்லை மீறுகிறது.
மற்றவர்கள் விரும்புகிற காரியங்களை செய்கின்ற போது நாம் பாராட்டப்படுதலும், நேர்மையாக, உண்மையாக நடந்து கொள்ளும்போது நாம் நிராகரிக்கப்படுவதும் வாழ்க்கையின் எதார்த்தம் ஆகிவிட்டது.
எதை நாம் கொண்டு வந்தோம்? எதை நாம் கொண்டு செல்ல போகிறோம்? என்ற கேள்விகள் அடிக்கடி நம்முடைய மனதில் ஒலித்துக் கொண்டு இருந்தால், இங்கு நிராகரிப்பை குறித்த கவலை நமக்கு இல்லை.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 13: 54-58) சொந்த ஊர் மக்களாலே இயேசு நிராகரிக்கப்படுகிறார். வல்ல செயல்களை புதுமைகளை கண்டு வியந்து நின்ற அந்த மக்கள் கூட்டம், இவருக்கு எங்கிருந்து இந்த ஞானம் வந்தது? இவரைப்பற்றி எமக்கு தெரியாதா? என்று சொல்லி அவருடைய பின்புலத்தை சுட்டிக்காட்டி அவரை ஏற்றுக் கொள்ள தயங்குகிறார்கள்.
அவர்களுக்கு இயேசுவின் மீது நம்பிக்கை இலலாததால், இயேசுவால் இன்னும் பல அரும் அடையாளங்களை செய்ய முடியாமல் போனது என்று நற்செய்தி பதிவு செய்கிறது.
ஒருவரால் ஆதாயம் உண்டு என்றால் அங்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது, தேவைமுடிந்த பின் இகழ்ச்சியும் களைப்பும்தான் ஏற்படுகிறது.
நம் வாழ்வில் மற்றவரின் பின்புலத்தை தேடாமல் மற்றவரின் முதுகெலும்பாய் இருந்து அவர் முன்னேற்றம் காண உழைக்கின்ற போது, நாம் கிறிஸ்துவை சார்ந்தவர்கள் என்று பெருமிதம் கொள்ள முடியும்.
வியப்புக்குரிய நம் வாழ்வை வியந்து போற்றுவோம்.
வியக்கத்தக்க ஆற்றலோடு இணைந்து பணி செய்வோம்.
எந்தவித புற காரணிகளும் பிறரை ஏற்றுக் கொள்வதற்கு நம் வாழ்வில் தடையாக இல்லாமல் பார்த்துக் கொள்வோம்.
நிராகரிப்பல்ல... ஏற்றுக் கொள்ளுதலே இங்கு தேவை!
No comments:
Post a Comment