24_08

நொறுங்கிய உள்ளம் கொண்ட ஆடு நாம்...


பொதுக் காலம் 19ஆம் வாரம்

13.08.2024 - செவ்வாய்க் கிழமை

"ஆயினும், செம்மறிக்கடாக்கள், காளைகளால் அமைந்த எரிபலி போலும் பல்லாயிரம் கொழுத்த ஆட்டுக்குட்டிகளாலான பலிபோலும் நொறுங்கிய உள்ளமும் தாழ்வுற்ற மனமும் கொண்ட நாங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவோமாக" - தானியேல் (இ) 1:16

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 18:1-5,10-14) இரண்டு கருத்துக்கள் பற்றி பேசப்படுகிறது 1. விண்ணரசில் யார் பெரியவர்? 2. யாரைக் குறித்து விண்ணரசில் மகிழ்ச்சி உண்டாகும்?

சிறு பிள்ளைகளைப் போல் நம்மை நாம் தாழ்த்திக் கொள்ள வேண்டும். கள்ளம் கபடற்ற குழந்தை உள்ளம் நமக்கு வேண்டும். பகை எதையும் மனதில் பதிய வைக்காத, சண்டை போட்டாலும் சிறிது நேரத்திலே பேசி விடக்கூடிய, தனக்கென்று எதையும் பதுக்கி வைக்காத, தற்பெருமை கொள்ளாத உள்ளமாக நம் உள்ளம் மாற வேண்டும். 

கடவுள் விரும்புவது தாழ்வுற்ற நொறுங்கிய உள்ளத்தை தான். தற்பெருமையும் ஆணவமும் குடியிருக்கும் உள்ளத்தில் இறைவன் ஒரு போதும் வசிப்பதில்லை. 

இறைவனே குழந்தையாக தான் இவ்வுலகில் உருவெடுத்தார். "இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியில் மிகுந்து கடவுளுக்கு மனிதருக்கு உகந்தவராய் வாழ்ந்து வந்தார்" என்று லூக்கா நற்செய்தி 2:52 பதிவு செய்கிறது.

குழந்தைப் பருவத்தை கடந்த பிறகு தான் தெரிய வருகிறது குழந்தை பருவம் எத்துணை அழகானது என்று. 

இயேசு வழி தவறிய ஆட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். வழி தவறிய ஒரு ஆட்டை தேடி செல்வதன் வழியாக 99 ஆடுகள் முக்கியம் இல்லை என்று பொருள் கொள்ளக்கூடாது. மாறாக, எது பாதை மாறியதோ எது தடம் புரண்டதோ அதற்குத்தான் பாதுகாப்பு தேவை. 

தன்னைப் புறக்கணித்து செல்பவர்களை இயேசு ஒருபோதும் புறக்கணிப்பதில்லை. தன்னை விட்டு விட்டு வேறு உலகைத் தேடிச் செல்பவர்களை இயேசு விட்டு விடுவதில்லை. 

வழிதவறியவர்களை, தடுமாறி வாழ்வை இழந்தவர்களை இயேசு மீண்டும் நல்வாழ்வுக்கு கொண்டு வருவதன் வழியாக மகிழ்ச்சி அடைகிறார். ("அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்” - லூக்கா 15:10) 

இவ்வுலகில் நம் பங்களிப்பு என்பது வழி தவறி போன வாழ்வு இழந்த மனிதர்களை நல்வழிப்படுத்துவது. 

பிறருடைய நல்வாழ்வுக்கு உதவ முன் வரவில்லை என்றால் நாம் கிறிஸ்தவர் என்று அழைக்கப்படுவது முறையல்ல.

கிறிஸ்தவர் தன்னலம் பாராட்ட கூடாது, தற்பெருமை கொள்ளக் கூடாது, தன்னை முன்னிலைப்படுத்த கூடாது. 

ஆனால் இன்றைய எதார்த்த உலகில் கிறித்தவர்கள் கிறித்தவர்களுக்கு எதிரியாக இருக்கிறார்.

தனக்கு கிடைக்காத புகழ், பதவி மற்றவர்களுக்கு கிடைத்துவிட்டது என்றால் அவர்கள் பெயரை கெடுக்கவும், அவர்களை அழிக்கவும் துணிந்துவிடுகிறார்கள். 

ஒருவேளை நாம் வழிதவறியவர்களை கண்டுகொள்ளவில்லை என்றால், யார் எப்படி போனாலும் பரவாயில்லை என்று நினைத்தால் நாம் கிறிஸ்துவின் பணியாளர்கள் அல்ல. 

குழந்தை உள்ளத்தோடு நொறுங்கிய தாழ்வுற்ற நெஞ்சத்தோடு இயேசுவை தேடுவோம். 

நாமும் நெறி தவறிப் போகாமல் இருப்போம். மற்றவர்களும் நெறி தவறிப் போகாமல் இருக்க நம்மாலான உதவிகளை செய்வோம்.

1 comment:

  1. தந்தையே உங்களது எண்ணங்களும் கருத்துக்களும் மிகச் சிறப்பாக உள்ளது

    ReplyDelete

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...