பொதுக் காலம் 21ஆம் வாரம்
29.08.2024 - வியாழக் கிழமை
தலைமறைவான வாழ்க்கை வாழ்ந்த (பாலைவன வாழ்க்கை) யோவான், தலை வெட்டப்பட்டு உயிர்த் தியாகம் செய்கிறார். நல்லவர்கள் கொலை செய்யப்படுவதும், தீயவர்கள் தழைத்தோங்கி வாழ்வதும் அன்று தொடங்கி இன்று வரை நீடிக்கிறது.
சிலர் நன்மை செய்ய தயங்குவது, உயிரை இழந்து விடுவோமோ என்ற பயத்தினால் தான். அஞ்சி அஞ்சி வாழ்பவனுக்கு அனுதினமும் சாவுதான். பயப்படாத வீரனுக்கு ஒரே ஒரு சாவு தான்.
யாரும் சாவை விரும்பி ஏற்பதில்லை. நல்லதை சொல்வதால், நன்மை செய்வதால் மரணம் உண்டு என்பதை புனிதர்களின் வாழ்வும் சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களின் வாழ்வும் படம்பிடித்து காட்டுகிறது.
இறப்பு வந்து விடுமே என்று சொல்லி நல்லோர், நன்மை எனும் நேர்கோட்டில் இருந்து விலகுவதில்லை.
"நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது (மத்தேயு 5:10) என்ற இறைவார்த்தைக்கு சொந்தக்காரர்கள் தான் நல்லது செய்து உயிரை தியாகம் செய்தவர்கள்.
சபை உரையாளர் நூல் 8:12 இவ்வாறு சொல்கிறது, "பாவி நூறு முறை தீமை செய்து நெடுங்காலம் வாழ்ந்தாலும் கடவுளுக்கு அஞ்சி நடப்பவர்களே நலமுடன் வாழ்வார்கள்".
நலமுடன் வாழ ஒருவேளை இவ்வுலகில் சாத்தியம் இல்லை என்றாலும் நாம் எதிர்நோக்கி இருக்கக்கூடிய விண்ணக வாழ்வில் அது நிறைவாய் கொடுக்கப்படும்.
இன்று மனிதர்கள் தவறு செய்ய துணிவதனுடைய காரணம், நமக்கு மேல் யார் இருக்கிறார்? நமக்கு அடுத்து என்னவாகும்? என்ற சிந்தனை இல்லாதது தான்.
தவறு செய்வோர் இருக்க அதை தட்டிக்கேட்போர் பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவர்களில் ஒருவர்தான் திருமுழுக்கு யோவான். தன்னை நாடி வரக்கூடியவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் (உயர்நிலையோ தாழ்நிலையோ) அவர்கள் செய்வது தவறு என்றால் அதை அதிகாரத்தோடு தட்டிக் கேட்கக் கூடியவர்தான் திருமுழுக்கு யோவான்.
தன்னைத் தேடி வந்த பரிசேயர், சதுசேயர் சிலரை பார்த்து, "விரியன் பாம்பு குட்டிகளே வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்? நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்" (மத்தேயு 3:7,8) என்றவர், அரசர் என்றாலும் கூட, நீ உன் சகோதரன் மனைவியை வைத்திருப்பது முறையல்ல (மத்தேயு 14:4) என்று சுட்டிக் காட்டியவர், மனம் மாறுங்கள் ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது என்று மக்கள் மத்தியில் பறைசாற்றியவர்.
அதே திருமுழுக்கு யோவான் தன்னை தாழ்த்தக் கூடியவராகவும் இருக்கிறார்.
எனக்குப் பின் ஒருவர் வருகிறார் அவருடைய மிதியடி வாரை தூக்கிச் செல்ல கூட எனக்கு தகுதி இல்லை (மத்தேயு 3:11) என்றும் இதோ கடவுளின் ஆட்டுக் குட்டி. ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தை போக்குபவர். எனக்குப் பின் வரும் இவர் என்னை விட முன்னிடம் பெற்றவர் (யோவான் 2:29,30) என்றும் தன் சீடர்களை இயேசுவின் சீடர்களாக மாற்றும் குணம் கொண்டவர்.
ஒட்டக முடியாலான ஆடை, வெட்டுக்கிளியும் காட்டு தேனும் உணவு உண்டு எளிய வாழ்க்கை வாழ்ந்தவர்.
தன்னையும் தூய்மைப்படுத்திக் கொண்டு இறைவனின் வருகைக்காக மனிதர்களையும் தூய்மைப்படுத்தும் ஒரு மேலான பணியை செய்தவர். அந்தப் பணியின் காரணமாகத்தான் ஏரோது தவறு செய்தபோது அவரை தட்டிக் கேட்டார். ஏரோதியாளின் சூழ்ச்சியினால் சிறைத் தண்டனை, இறுதியாக தலை வெட்டப்பட்டு தன் உயிரை இழக்கக் கூடிய தருணம் எல்லாவற்றிலும் அவர் நேர்மையுடையவராகவே இருந்தார்.
திருமுழுக்கு யோவானின் வாழ்க்கை நமக்கு சுட்டிக்காட்டு பாடம். உண்மைக்கும் தீமைக்கும் இடையேயான போராட்டத்தில் தீமையோடு சமரசம் செய்து கொள்ளக்கூடாது. பெயரை இழக்க நேர்ந்தாலும், ஏன் உயிரையே இழக்க நேர்ந்தாலும் தீயவர்களோடு கைகோர்க்க கூடாது.
பகட்டான ஆடம்பர வாழ்க்கை அல்ல எளிய வாழ்க்கை தான் கடவுளுக்கு உகந்தது.
இறைப்பற்றில்லாத உலக நாட்டமுள்ள மனிதராக வாழாது, கடவுளை சார்ந்து மனிதத்தை நேசிக்கும் மனம் கொண்டவர்களாக வாழ வேண்டும்.
சிறிது பணமும் அதிகாரம் வந்துவிட்டால் ஆணவத்தோடு செயல்படும் மனநிலை வந்துவிடுகிறது. சொந்த உறவுகளை மதிக்காத மனநிலை ஏற்பட்டு விடுகிறது.
இருப்பதையும் இழக்க நேரிடும் எனவே இருக்கின்றபோதே இரக்கத்தோடு வாழ பழகிக் கொள்ள வேண்டும்.
நன்மை செய்வதனால் நல்லோர் பக்கம் இருப்பதினால் தீமை உண்டு என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
- 1பேதுரு 4:14 கிறிஸ்துவின் பொருட்டு பிறர் உங்கள் மீது வசை கூறும் போது நீங்கள் பேறுபெற்றவர்கள். ஏனெனில் கடவுளின் மாட்சிமிக்க தூய ஆவி உங்கள் மேல் தங்கும்.
- 1பேதுரு 4:19, கடவுளின் திருவுளப்படி துன்பப்படுகிறவர்கள் நன்மை செய்வதில் நிலைத்திருந்து படைத்தவரிடம் தங்களை ஒப்படைப்பார்களாக! அவர் நம்பத் தக்கவர்.
No comments:
Post a Comment