24_08

முன்மதியுடைய பணியாளராக...


முன்மதியுடைய பணியாளராக
பொதுக்காலம் 21ஆம் வாரம் 
30.08.2024 - வெள்ளிக் கிழமை

“இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்குமுன் வழியை ஆயத்தம் செய்வார்; அப்பொழுது, நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார்” என்கிறார் படைகளின் ஆண்டவர்" - மலாக்கி 3:1

எப்போது என்ன நடக்கும் என்பது நமக்கு தெரியாது! நாம் நினைக்கும் காரியங்கள் எப்போது நிறைவேறும் என்பதும் நமக்கு தெரியாது! ஆனால் நடக்க வேண்டிய அனைத்தும் நடக்க வேண்டிய நேரத்தில் சரியாக நடக்கும். அதற்காக நாம் செய்ய வேண்டியதை செய்யாமல் இருக்கக்கூடாது. கடவுள் நமக்கு அறிவாற்றலை கொடுத்திருக்கிறார், கூர்வுணர்வோடு செயல்பட அழைத்திருக்கிறார். 

கடவுள் கொடுத்த மதிநுட்பத்தை சரிவர பயன்படுத்த வேண்டும்.

எல்லாம் கடவுள் கையில் இருக்கிறது, நாம் ஏன் உழைக்க வேண்டும்? ஆயத்தமாய் இருக்க வேண்டும்? என்ற கேள்விகள் நம்முடைய வாழ்வை குழப்புகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 25:1-13) முன்மதியோடு செயல்பட்ட ஐவரையும் அறிவிலிகள் ஐவரையும் பார்க்கிறோம். மணமகனை எதிர்கொள்ள சென்ற ஐந்து தோழியர் தங்களோடு விளக்கும் எண்ணெய்யையும் எடுத்துச் சென்றார்கள், மற்ற ஐவரோ வெறும் விளக்குகளை மட்டும் எடுத்துச் சென்றார்கள்.

முதல் ஐவர் தயாரிப்போடு இருந்தார்கள், முன்மதியோடு செயல்பட்டார்கள். இந்த தயாரிப்பு என்பது நம் வாழ்வோடு ஒப்பிடப்படுகிறது. இவ்வுலகில் வாழ்கின்ற போது நாம் நிரந்தர குடிமக்களாக இங்கு தங்கி விடப் போவதில்லை. மறு உலக வாழ்வை நோக்கிய பயணத்திற்கான ஆயத்தமே இவ்வுலக வாழ்வு. 

இந்த உலகத்தில் உண்டு, குடித்து, ஆடம்பரத்தோடு வாழ்ந்து முடிப்பதல்ல கிறித்தவ வாழ்வு, மாறாக இறையாட்சியின் விழுமியங்களை சொல்லாலும் செயலாலும் கடைப்பிடிக்க வேண்டும். அதுதான் இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கக் கூடியது. 

எப்போது நாம் அழைத்துக் கொள்ளப்படுவோம்? (எப்போது இறப்பு வரும்?) என்பது தெரிந்து விட்டால் வாழ்க்கை இனிமையாக இருக்காது. எப்போது அழைப்பு வந்தாலும் தயாராய் இருக்கிறேன், ஆயத்தமா இருக்கிறேன் என்பதுதான் நம் பதிலாக இருக்க வேண்டும்.

இந்த ஆயத்தம் என்பது வாழ்க்கையின் சீர் நிலையை குறிக்கிறது. (எப்படியும் வாழலாம் என்ற வாழ்க்கை ஆயத்த வாழ்வு அல்ல). அறிவிலிகள் ஐவரின் எண்ணம் அதுவாகத்தான் இருந்தது. மணமகன் வரும்போது பார்த்துக்கொள்ளலாம். இந்த மனநிலையோடு இருந்த காரணத்தினால் தங்களோடு எண்ணெய் எடுத்துக் கொண்டு போகவில்லை. திருமண மண்டபத்திற்குள்ளும் நுழைய முடியவில்லை.

ஆயத்தமாய் இருந்தவர்கள் (நல்வாழ்வு வாழ்ந்தவர்கள்) மணமகனோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள் (விண்ணக வாழ்வை பெற்றார்கள்).

நாமும் முன்மதியோடு செயல்படுவோம். எல்லாம் அறிந்திருந்தும் எதையும் அறியாத வரை போல காட்டிக் கொள்வது முன்மதியுடையோரின் செயல் அல்ல.

கடவுள் வரும் நாளும் வேளையும் நமக்குத் தெரியாது. ஆனால் அவர் வருவார் என்பது நமக்கு தெரியுமே! விளக்குகளை கையில் ஏந்தியவர்களாய் ஆயத்தமாய் அவரை எதிர்கொள்வோம்.

நம்மால் முடிந்த நன்மைகளை செய்து விளக்கிற்கு தேவையான எண்ணெயை சேமிப்போம்...

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...